தைப்பொங்கல் மதங்களைக் கடந்து தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒர் பண்பாட்டுப் பெருவிழா. இயற்கையைப் போற்றுகின்ற இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே தொன்றுதொட்டுப் பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், வசதி கருதி மண்பானைகளைத் தவிர்த்து அலுமியப் பானைகளில் பொங்கும் போக்கு எம்மிடையே அதிகரித்துள்ளது.
அலுமியப் பாத்திரங்களை முற்றாகத் தவிர்க்க இயலாது போனாலும் தைப்பொங்கல் போன்ற பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
