அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் “அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசம் (THAAD : Terminal High-Altitude Area Defense) இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இஸ்ரேலைப் பாதுகாப்பதே அதன் இலக்கு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார். அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 180 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட இரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கா, இஸ்ரேலில் அமெரிக்கப் படைகளை தரையிறக்க உள்ளது. எனவே இந்த செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விளம்பரம்

இஸ்ரேலில் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க படைகள் உள்ளன. ஆனால் இம்முறை சுமார் 100 துருப்புகள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் அதிகரித்து வரும் அமெரிக்க ஈடுபாட்டை இது குறிக்கிறது.

இரான் மீது இஸ்ரேல் இன்னும் அதன் தாக்குதலைத் தொடங்கவில்லை. பதிலடி மிகவும் “ஆபத்து நிறைந்ததாகவும், துல்லியமாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் படுகொலை செய்ததால் தான் இஸ்ரேலை தாக்கியதாக இரான் கூறியது.

Share.
Leave A Reply

Exit mobile version