உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.
ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88.
ஆஸ்திரேலியாவில் அவர் ‘தங்கக் கை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடி இருந்தது. கருவில் இருக்கும் குழந்தையை தாயின் ரத்தம் தாக்கும் அபாயம் இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்க இந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது.
14 வயதில், அவருக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையின் போது, பல முறை அவருக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய உறுதியளித்ததாக, ஹாரிசனுக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவித்தது.
18 வயதில் அவர் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ய தொடங்கினார். தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ் ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
2005 ஆம் ஆண்டில், அதிக முறை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ததற்கான உலக சாதனையை அவர் படைத்தார். 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை முறியடித்த வரை, ஜேம்ஸ் ஹாரிசன் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.
“எந்த செலவும் அல்லது வலியும் இல்லாமல், எனது தந்தை பல உயிர்களைக் காப்பாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்”, என்கிறார் ஹாரிசனின் மகள் டிரேசி மெல்லோஷிப்.
“இது வலிக்காது என்றும், நீங்கள் காப்பாற்றும் உயிர் உங்களுடையதாக கூட இருக்கலாம் என்றும் எனது தந்தை எப்போதும் கூறுவார்”, என்று டிரேசி கூறினார்.
டிரேசி மற்றும் ஜேம்ஸ் ஹாரிசனின் இரண்டு பேரக் குழந்தைகளுக்கும் anti-D தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
“எங்களைப் போன்ற பல குடும்பங்கள், அவரது இந்த செயலால் பலன் அடைத்துள்ளதைப் பற்றி கேள்விப்பட்டது ஜேம்ஸுக்கு மகிழ்ச்சியை அளித்தது”, என்று அவர் கூறினார்.
Anti-D தடுப்பூசிகள் கருவில் உள்ள மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வரும் ஹீமோலிடிக் நோய் அல்லது HDFN எனப்படும் ஆபத்தான ரத்தக் கோளாறிலிருந்து பாதுகாக்கின்றன.
இந்த நோய் கர்ப்ப காலத்தின் போது வருகிறது. தாயின் ரத்த சிவப்பணுக்கள் கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போது இந்த நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு குழந்தையின் ரத்த அணுக்களை அச்சுறுத்தலாகக் கருதி அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை, இதய செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

